அஸ்ஸலாமு அழைக்கும் - அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக

ஞாயிறு, 20 ஜூன், 2010

எளிமை

நம்ம ஆளுங்ககிட்ட போய் எளிமை பத்தி சொன்னா அட சும்மா இருப்பா, இதல்லாம் இந்த காலத்துக்கு சரிபட்டு வராதுன்னு சொல்றாங்க. ஒண்ணுமே இல்லாதவங்க  தான் வெட்டியா பந்தா பண்ணிட்டு திரிவாங்க, அதோட இப்டி பண்ணினாத்தான் நாலுபேர் நம்மள மதிப்பாங்கன்னு வேற பீத்துவாங்க. உண்மைலயே இந்த வெட்டி பந்தா மற்றவர்களிடம் மதிப்பை ஏற்படுத்துகிறதா என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நம்ம எல்லாருக்கும் தெரிந்த அம்பானி ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி கொடுக்கிறார் அதுல அவர் சொல்ற விஷயம் என்னன்னா எவ்ளோதான் காசு பணம் இருந்தாலும் எளிமையான வாழ்க்கைதான் மனிதனைச் சீராக்கும், நிம்மதி தரும். எவ்ளோ பிஸியா இருந்தாலும் என் குடும்பத்தினருடன் பேசாமல் நான் தூங்க செல்வதில்லை. அதுபோல நான் வீட்டுக்கு வரும்வரை என் மனைவி மக்கள் சாப்பிடாமல்  காத்திருப்பார்கள். எல்லோரும் சேர்ந்து ஒன்னாதான் சாப்பிடுவோம். எங்களுக்குகென்று சொந்த flight  இருந்த போதிலும் நாங்கள் ஏர் இந்தியாவில்தான் பயணம் செய்வோம், என் பிள்ளைகள் ஹாஸ்டலில்தான் தங்கி படிகிறார்கள் என்று இப்படியே அவரின் எளிமையான வாழ்க்கை முறைப் பற்றி அடுக்கிறார். 

அறிஞர் அண்ணா அவர்கள் சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்து, மிகுந்த கல்வி அறிவும்-புலமையும் பெற்று பேரறிஞராக, தமிழக மக்களின் நம்பிக்கைக்கு உகந்த ஒப்பற்ற தலைவனாக உயர்ந்தாலும், அறிஞர் அண்ணா தம் வாழ்நாள் முழுவதும் மிக எளியவராகவே வாழ்ந்தார். சரி அது போகட்டும்...

நம் உயிரின் மேலான நமது நபி முஹம்மது (ஸல்) அவர்கள் பெருந்தலைவர், மாபெரும் ஆட்சியாளர், இன்னும் எத்தனையோ உயர்ந்த இடத்தில இருந்த அவர்களின் வாழ்க்கைமுறை எப்படி இருந்தது என்று பார்த்தல், நமக்கெல்லாம் கண்ணீர்தான் வரும்...  இதோ பாருங்கள் அவர்களைப் பற்றி...
ஒரு முறை உமர் (றழி) அவர்கள் றஸூல் (ஸல்) அவர்களை சந்திக்கச் செல்கிறார்கள். அப்போது நபியவர்கள் ஒரு (ஈச்ச மர ஓலையால் பின்னிய) பாயில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவரது உடம்பின் மேற்பகுதியில் எந்தப் போர்வையும் இல்லை. இதனால் அவரது முதுகில் பாயின் அச்சுகள் பதிந்திருந்தன. அவரது வீட்டின் ஒரு மூலையில் ஒரு கைப்பிடியளவு கோதுமை விதைகளும் கடுமையான மேல் தோலைக் கொண்ட ஒரு வகை தானிய வகைகள் சிலவும் காணப்பட்டன. அவரது தலைக்கு மேலால் ஆட்டுத் தோல் தொங்கிக் கொண்டிருந்தது. இதனைப் பார்த்த உமர் (றழி)க்கு அழுகை வந்துவிட்டது. இதனைப் பார்த்த நபியவர்கள் கத்தாபின் மகனே ஏன் அழுகிறீர்கள்? எனக் கேட்டார். அதற்கு உமர் (றழி) அவர்கள்: அல்லாஹ்வின் தூதரே! ஏன் நான் அழாதிருக்க வேண்டும்? இதோ இந்தப் பாயின் அச்சுக்கள் உங்கள் முதுகில் பதிந்துள்ளன. உங்களிடம் இருக்கின்ற சொத்துக்கள் இதோ நான் பார்த்துக் கொண்டிருப்பவை மாத்திரம்தான். அங்கே கிஸ்ராவும் கைஸரும் அழகிய கனி தரும் மரங்களுக்கும் ஆறுகளுக்கும் மத்தியில் வாழ்கிறார்கள். நீங்கள் அல்லாஹ்வின் தூதராகவும் அவனின் சிறந்த படைப்பாகவும் இருக்கிறீர்கள்? ஆனால் இதுதானா உங்களது நிலை எனக் கேட்டார். இதைக் கேட்ட நபியவர்கள்: கத்தாபின் மகனே, எனக்கு மறுமையும் அவர்களுக்கு உலகமும் கொடுக்கப்படுவதை நீ விரும்பவில்லையா? எனக் கேட்டார்கள்.
இதைவிட எளிமையை வேறெங்கும் காணமுடியாது. ஆக இதிலிருந்து பாடம் பெற்று இறைவன் நமக்கு வழங்கி இருக்கிற வாழ்கையை எளிய முறையில் அனுபவித்து மற்றவர்க்கும் பயனுள்ள வகையில் அமைத்துக்கொள்ள வேண்டும்.